Thursday, June 25, 2009

இதயத்தை இதமாக்கும் அருமை உணவு! மீன் சாப்பிடுங்கள்!


நமது இரத்தத்தில் இரண்டு வகையான கொழுப்பு புரதங்கள் காணப்படுகின்றன.

1.உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (HDL Colestral)
2.தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (LDL Colestral)

இதில் தாழ் அடர்த்தி லிப்போ லிப்போ புரோட்டீன் (LDL Colestral) அதிகரிக்கும் போது அவை இரத்த நாளங்களில் படிந்து இதய நோய் வருவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

ஆனால் உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL Colestral)
தேவையற்ற கொழுப்பை இரத்தச் சுற்றோட்டத்திலிருந்து வெளியேற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL Colestral) மீன்களில் செழுமையாகக் காணப்படுகிறது.

எனவே நமது அன்றாட உணவு வகைகளில் மீன்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லதாகும்.

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் வைட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா – 3 (OMEGA-3) எனப்படும் கொழுப்புப் பொருள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

சருமநோய் வராமல் தடுக்கிறது.

முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு (Cardiac Arrest) வராமல் காக்கிறது.

அப்ப எல்லோரும் நல்லா மீன் சாப்பிடுங்க!

பின் குறிப்பு:

மீனை எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும்.

இறைவழிகாட்டுதல்:

தரையில் உள்ளவற்றில் தானாகச் செத்தவை உண்பதை இஸ்லாம் விலக்கியுள்ளது. ஆனால் கடலில் உள்ளவை (மீன்) செத்து மிதந்தாலும் உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது!

பின் வரும் வசனத்தையும் சேர்த்து விளங்கிக் கொண்டால் மீன் எவ்வளவு மகத்தான ஓர் அருட்கொடை என்பது புலப்படும்!

“நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்” (திருக்குர்ஆன் 16:14)

நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ்

Wednesday, April 8, 2009

கவிதைத் துளிகள்!

கவிதைத் துளிகள்!
வழங்கியவர்: அபூ முனீறா

1. எய்ட்ஸ்

உந்தி வரும் வீரியத்தை சிந்த இடம் தேடுபவன்
சிறந்ததையா தேடிடுவான்? கிடைத்ததெதுவோ போதுமென்பான்
காமத்திற்கு கண்ணேது? எண்ணிபணத்தை கொடுத்துவிட்டு
எய்ட்ஸை அள்ளி கொண்டு வந்திடுவான்
அற்ப சுகம் தணிந்தாலும் அவன் ஆயுள் வரை அவஸ்தை தான்

2. சுற்றுப்புறச் சூழல்

சுற்றுபுறத்து சூழ்நிலைகள்
சுகமாய் இருக்கச் செய்திடுவீர்!
சுகாதாரத்திற்கு சுதந்திரம் தந்து
சுக ஆரோக்கியமாய் வாழ்ந்திடுவீர்!
காடு வளர்ந்தால் நாடு செழிக்கும்
காடு அழிந்தால் நாடு கொதிக்கும்
வீட்டையும், நாட்டையும் காப்பது போல்
காட்டையும் கண்ணாய்க் காத்திடுவீர்!
நாடு செழிக்க மரம் நடுவீர்!
நலமாய் வாழ வழி வகுப்பீர்!


3. தொண்டன்

கைபிடித்த மனைவிக்கு கஞ்சி ஊற்ற வக்கில்லாதவன்
கட்சித் தலைவனுக்கு கட்டவுட் வைக்கிறான்

Tuesday, March 31, 2009

உணவே மருந்தாக!

நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு ஊறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.

எவ்வளவு, எவ்வாறு உண்பது?

உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்

•உணவு உட்கொள்ளும் நேரம்
•உண்ணும் முறை
•உண்ணும் அளவு
•சமைக்கும் முறை
•உணவின் வகைகள்

உணவு உட்கொள்ளும் நேரம்

உணவை அதற்குரிய சரியான வேளைகளில் உட்கொள்ள வேண்டும். நேரம் தவறிய உணவு முறைகள் உடல் மற்றும் மன நலத்துக்கு ஊறு விளைவிக்கலாம். தங்கள் அலுவல் முறைகளைக் கருத்தில் கொண்டு உண்ணும் நேரத்தில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைபிடிக்க வேண்டும்

உண்ணும் முறை

உண்ணும் முறையில் தனிக் கவனம் வேண்டும். உணவு உண்பதில் அவசரம் காட்டக் கூடாது. நன்கு மென்ற பின்னரே விழுங்க வேண்டும். ஒரு நாளில் எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் தண்ணீர் அருந்த வேண்டும். உணவை அவசர அவசரமாக விழுங்குவதும் அதிகமாக உண்பதும் உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பதாகும்.

உண்ணும் அளவு

ஒவ்வொருவரும் தனது வயது, உயரம், எடை, செயல்பாடுகள், வேலை, விளையாட்டு, கடின உழைப்பு, உடற்பயிற்சி முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனக்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப உண்பதற்குப் பதில் ஒரளவுக்குப் போதும் என்பது வரை உண்பதே சிறந்தது. உணவில் தானிய வகைகளையும் காய்கறிகளையும் சோ்த்துக் கொள்வது நலம்.

சமையல் முறை

நாம் தோ்ந்தெடுக்கும் உணவுகள் எவ்வளவு சிறந்ததாக இருப்பினும் சமைக்கும் முறை நல்லதாக அமையாவிடில் அதுவே மோசமாகிவிடும். எனவே உணவு சமைக்கும் போது தனிக் கவனம் செலுத்தவேண்டும். சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை.

1.காய்கறிகளை நிறைய உபயோகிக்க வேண்டும்


2.அவித்தல், வேகவைத்தல் முதலியவை சாலச் சிறந்தது


3.வறுவல் மற்றும் பொரியல் எப்போதாவது ஒரு முறை மட்டும் செய்க.


4.ஒரு முறை பொரித்த எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க.


5.மிச்சம் மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு.


6.சமையலில் எண்ணெய், தேங்காய் முதலியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும்


7.ஊறுகாய், அப்பளம் முதலியவை தினசரி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

உடலுக்கு உகந்த உணவுகள்

தானிய வகைகள்

அரிசி, கோதுமை முதலியவை நல்ல தானிய வகை உணவினங்களாகும். கோதுமையை அவற்றின் தவிட்டுடன் உபயோகிப்பதே நல்லது. கோதுமையின் தவிட்டை சுத்திகரித்து உருவாக்கப்பட்ட மைதா மாவு உடல் நலத்துக்கு உகந்ததல்ல.

பயிறு மற்றும் பருப்பு வகைகள்

கடலை, பயிறு மற்றும் பருப்பு வகைகள் நல்ல ஆரோக்கிய உணவுகளாகும். கடலையைத் தொலியுடன் உண்பதே நல்லது. உடலுக்குத் தேவையான புரேதச் சத்துக்கள் பயிறு மற்றும் பருப்பு வகைகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்க.

காய்கறிகள் கீரைகள் மற்றும் பழ வகைகள்

உடலுக்கு மிகவும் அத்தியவசியமான தாதுக்கள், மற்றும் ஃபைபர் சத்துக்கள் காய்கறிகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று முறையேனும் கீரைகளை உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். பழவகைகளை தினமும் உட்கொள்க.

பால்

பாலில் நிறைய புரோட்டீன் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பாலும் பால் உற்பத்திப் பொருட்களும் சிறந்த உணவாகும். ஆனால் வயது முதிர்ந்தவர்கள் பாலை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மீன்

மீன் சிறந்தாரு உணவாகும். மீனை தினசரி உணவாகவே உட்கொள்ளலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் மீன்களில் அடங்கியுள்ளன. மீனைப் பொரியல் வறுவல் செய்வதை விட வேகவைத்து உண்பது சிறந்தது.

இறைச்சி, முட்டை

இறைச்சி வாரத்தில் ஓரிரு முறைகள் மட்டும் உட் கொள்க. மட்டன் பீஃப் போன்றவை குறைந்த அளவில் மட்டும் உட்கொள்க. அவற்றின் கொழுப்புகள் இதயத்துக்கு ஊறு விளைவிக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. முதியவர்கள் முட்டை உண்பதைக் குறைக்க வேண்டும். வாரத்தில் ஒன்றோ இரண்டோ உட்கொள்க. குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி வேகவைத்த முட்டை கொடுக்கலாம். முட்டையின் வெள்ளைக் கரு தினமும் கொடுக்கலாம். முட்டை, இறைச்சி, முதலியவற்றை வறுவல் அல்லது பொரியல் செய்து உண்பதைத் தவிர்க்கவும்.

சர்க்கரை, நீரிழிவு நோயாளிகள் கவனிக்க

1.இனிப்பு உண்பதைத் தவிர்க்க.


2.எண்ணெய், தேங்காய் முதலியவை உபயோகிப்பதில் கட்டுப்பாடு வருத்தவும்


3.சரியான நேரத்தில் உண்ணவும்


4.வறுவல் பொரியல் முதலியவை உண்பதை விட்டு விடவும்


5.பழ வகைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டுக்கு அதிகம் வேண்டாம்


6.காய்கறிகள், கீரைகள் உணவில் சோ்த்துக் கொள்க.


7.தோல் அகற்றிய கோழிக்கறி உண்ணலாம். மாட்டுக் கறி உண்பதைத் தவிர்க்கவும்


8.புரோட்டா, பேக்கறி ரொட்டிகள், கேக், ஸாஃப்ட் டிரிங்க்ஸ், முட்டையின் மஞ்சள் கரு முதலியவற்றை தவிர்த்து விடவும்.


9.உப்பின் அளவைக் குறைக்கவும்.


10.தவிட்டுடன் கூடிய தானியங்களை உட்கொள்ளவும்


11.பாலின் அளவைக் குறைக்கவும். தினமும் 250 மில்லி அளவில் அதிகமாக வேண்டாம்.


12.உணவின் அளவில் கட்டுப்பாட தேவை


13.எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் வரை நீர் அருந்தவும்.


14. டீ, காஃபி அதிகமாகக் குடிக்கக் கூடாது

சர்க்கரை, கொழுப்பு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை எல்லா வயதினரும் குறைப்பதே சிறந்தது.

நன்றி – கல்ஃப் மாத்யமம்